Author: ஆதி
•8/01/2011 08:19:00 PM
பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற வைத்திட இயலுமா உன்னால் ?


ஒரு மரம் வெட்டப்படுவதை
ஒரு பறவை அல்லது விலங்கு வேட்டையாடப்படுவதை
ஒரு சிசு கொல்லப்படுவதை
ஒரு பெண் அல்லது சிறுமி கற்பழிக்கப்படுவதை
ஒரு குழந்தை அநாதரவாய் அல்லது பிச்சையெடுக்க விடப்படுவதை
ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை
ஒரு நாடு வறுமையால் கொள்ளை தொழில் உறுவ‌தை
ஒரு இனம் கொன்று குவிக்கப்படுவதை
என ஏதேனும் ஒன்று
நிகழ்தலிலிருந்து உன்னால் தடுத்துவிட இயலுமா ?

பிறகு
இவ்வுலகினுக்கு தர அல்லது செய்ய
உன்னிடம் என்ன இருக்கிறது ?

அன்பை தவிர....
Links to this post
Author: ஆதி
•7/18/2011 03:11:00 AM
நிர்வாணத்தை மறைக்கிற
ஆடைகளிடம்
மறைக்க இயலாது
நிர்வாணத்தை....

ஆடைகள் நிர்வாணமானவை
நிர்வாணம் ஆடைபோன்றவை

நிர்வாணம் உன் இணை
உன் இணை உன் ஆடை

ஆடைகள் நிர்வாணத்தை மறைப்பதில்லை
அவை நிர்வாணத்தை தெரிந்து கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு உறவு கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு நிர்வாணமாய் ஆகிவிடுகின்றன


கடவுளின் கடவுள்
--------------------------

நிர்வாணம் என்பது
ஒரு பேருண்மையின் பேருண்மை
ஆகவே
ஓர் உயிர் உற்பத்திக்கு
இரு நிர்வாணங்கள் தேவைபடுகிறது..


தொலைந்த தூய்மை
----------------------------

நிர்வாணத்தை மறைக்கத் தெரியாதவரை
மனமும் நிர்வாணமாய் இருந்தது
நிர்வாணத்தை மறைக்கக் கற்றப்பின்
மனம் வக்கிரங்களால் நிரம்பிவிட்டது..


பொருள் பொய்த்தல்
--------------------------

நிர்வாணத்தை பற்றி பேசுகையில்
ஒருவன் அசூயை கொள்கிறான்
ஒருவன் வெட்கித் தலைசாய்கிறான்
ஒருவன் தான் பார்த்தக் காமப்படத்தின்
சரசக் காட்சியில் ஆழ்கிறான்
ஒருவன் மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியின்
நெகிழ்ந்த உடைகளைப்பற்றி யோசிக்கிறான்
ஒருவன் விபத்தில் பிணமானவளின்
நிர்வாணத்தில் ஊருகிறான்...
ஒருவன் ரயில் பயணமொன்றில்
முட்புதர் நடுவில் மலங்கழித்துக் கொண்டிருந்த
ஒருத்தியைப் பற்றிச் சிந்திக்கிறான்
ஒருவன் தன் அந்தரங்கங்களின் பழைய ஞாபகங்களில் மூழ்குகிறான்
ஒருவன் சிகெரட்டென காமத்தில் புகைய ஆரம்பிக்கிறான்
ஒருவன் பேசுபவனை வக்கிரக்காரனெனப் பழிக்கிறான்

சுய மன விகாரம்
-------------------------

யாருக்கும் தம் நிர்வாணத்தைப் பற்றி
யோசிக்கும் அல்லது பேசும்
தைரியம் வந்துவிடுவதில்லை..
யாவரின் நிர்வாணமும்
மறைக்கப்பட வேண்டிய
படுபயங்கரமாதாகவே இருக்கிறது...
Links to this post
Author: ஆதி
•3/03/2011 04:03:00 AM
மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..
Links to this post
Author: ஆதி
•3/02/2011 12:14:00 AM
காதல்
கோடி தேவதைகள்
கூடி காக்கும்
தெய்வநரகத்தின் கருவில் இருந்து
உயிர்த்த புனித பாவம்..

யுகயுகங்களுக்கு முன்
ஊழிக்காலம் பிறப்பதற்கு
முந்தைய அந்திம பொழுதில்
ஆத்தீக சாத்தான்களின்
தெய்வீககரங்களால்
அருளப்பட்ட தேவசாபம்..

ஆதாமின் விழியிலிருந்து
ஏவாளின் மனதில் உதிர்ந்த
தூய வெறி
வெட்கப்பொறி

இறைவா!
அந்த வெறியை என்னிலும் விதை
உம் பரிசுத்த நாவினால்
தேவசாபத்தை எனக்கும் தருக
புனித பாவத்தில் மூழ்கி
புணர்ந்து உம்முடன் கலக்க
தெய்வநரகத்தின் விந்தை எனிலும்
சிந்துவீராக..
Links to this post
Author: ஆதி
•3/01/2011 07:31:00 AM
பூக்களின் மகரந்த சேர்க்கை போல்
நிகழ்ந்தது நம் புணர்ச்சி..

இருளின் அடி பாதாளத்தில்
சரிந்த வெளிச்ச துகளாய்
தூவினாய் உன் அன்பை என்னில்..

மயக்க ரகசியங்களை
மறைக்கும் திரைச்சீலையை கிழித்து
உனை நோக்கிய
பயண திசையின்
பாதையை தெளிவித்தாய்..


ஐப்பொருள் கடந்த
மெய்ப்பொருளே
நீ ஈந்த அன்பையும் தெளிவையும்
யார்க்கும் கொடுக்க
அருள்க எனக்கு..
Links to this post
Author: ஆதி
•2/28/2011 06:34:00 AM

அவனின் தோட்டா
புணர்ச்சியிலீடுப்பட்டிருந்த
அந்த மிருகத்தின்
பிறப்புறுப்பில் பாய்ந்திட மரணக்குரலெழுப்பி
அது துடித்த தருணத்தில்
குரூர விழிகளோடு
வக்ர புன்னகை பூத்தவனின்
கனவுகளில் பாய்ந்து
அந்தரங்க உறுபுகளை குதறி
இரத்தம் நக்க
அலறி எழுந்தவன் எதிரே
பிளந்த வாய்களில் மரணம் வழிய
உயிர் பிதுங்கிய கண்களால்
அவனை பார்த்துக் கொண்டிருந்தது
விறைத்த மிருகத்தின் தலை....
Links to this post
Author: ஆதி
•2/24/2011 05:32:00 AM

யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

 பாவத்தை உணர்ந்து
செப்பனிட முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவட்டை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய இயலாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..
Links to this post